இன்று மகாத்மா காந்தி அஞ்சலி தினம்
அவர் கொள்கைகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு
அவர் படத்தின் மீது பூக்களை பறக்க விடும் புரட்டர்கள்
நடத்தும் வருடாந்திர சடங்கு
காக்கைஇட்ட எச்சங்களை கழுவி இன்று மட்டும்
காந்தி சிலைகளுக்கு மாலை மரியாதை செய்யப்படும்
காலை 11 மணிக்கு சங்கு ஊதி ஒரு நிமிட
மௌனம் அனுசரிக்கப்படும்
அவரின் கொள்கைகளுக்கு சமாதி கட்டியதை
நினைவு கொள்ளும் வகையில் அவர் சமாதியில்
மலர் தூவி ஊழல் பெருச்சாளிகள் வெள்ளை உடை
தரித்து அஞ்சலி செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்
கதராடை அணிந்து கறுப்புபண முதலைகள்
கைராட்டை சுற்றும் .
தீண்டாமையை ஒழிக்க வந்த காந்தியை
தீண்டாதவர் என கருதி தீர்த்து கட்டி
தீரா பழியை தேடிகொண்டது ஒரு கூட்டம்
கள்ளை ஒழிக்க போராடிய காந்தியின் படம்
போட்ட ருபாய் நோட்டுக்கள் அரசுகள் நடத்தும்
சாராய கடைகளின் கல்லா பெட்டியில்
கண்ணீர் விடுகின்றன
நம் நாட்டு நெசவாளர்களின் கண்ணீரை துடைக்க
சுதேசி துணிகளை ஆதரித்து அந்நிய துணிகளை
எரித்த காந்தியின் கொள்கையை திட்டமிட்டு அழித்தன
ஆள வந்த அரசுகள்
இன்று நெசவாளர்கள்
வீட்டில் அடுப்பு எரியவில்லை
அவர்களே தங்களை வறுமை
என்னும் தீயில்
எரிந்து சாம்பலாகிராகள்
காந்தி கண்ட ராமராஜ்யம்
கனவாகி போய் விட்டது
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை
கிராமங்களுக்கு விடிவு காலம் இல்லை
காந்தியின் கொள்கையை குழி தோண்டி
புதைத்தவர்கள் காந்தி வேடமிட்டு
காந்தியில் கொள்கைகளை அலசி
ஆராய்ச்சி கட்டுரை எழுதுகிறார்கள்
ஆன்ம பலத்துடன் எதேச்சதிகாரத்தை
எதிர்க்க காந்தி தொடங்கிய
உண்ணா விரத போராட்டம்
இன்று உண்டு கொழுத்த அரசியல்
பிழைப்பாளர்களுக்கு கேலிக்குரிய
பொருளாகிவிட்டது
காந்தியே உன்னைப்போல் நடிக்ககூட
ஒரு மனிதனில்லை இந்நாட்டில்
அதற்க்கு கூட ஒரு வெள்ளையனை அல்லவோ
நாம் அணுகவேண்டியிருக்கிறது ?
காந்தியே நீ மீண்டும் வருக
உன் கொள்கைகளை இக்காலத்திற்கு ஏற்ற வகையில்
மாற்றி தருக
No comments:
Post a Comment